வியாழன், 3 ஜனவரி, 2019

ஆன்மா, மனம், உயிர், புத்தி, சமாதி நிலை - ஓர் விளக்கம் Dimensions of Soul and Mind - Samathi

ஆன்மா, மனம், உயிர்,  புத்தி, சமாதி நிலை  -   ஓர் விளக்கம்   Dimensions  of  Soul and Mind

மனிதனின் உடலுக்கு அப்பாற்பட்ட நிலைகள் மூன்று:  ஆத்மா , மனம், உயிர்.

உயிர் உடலுக்குள் இருந்து உடலை இயக்குகிறது.

ஆத்மா உடலுக்கு வெளியில் இருந்து கொண்டு மனதின் வழியாக உடலை இயக்குகிறது.

மனம் ஆத்மாவுக்கும் உயிருக்கும் இடையில் ஒரு ஏஜென்ட் அல்லது ஊடகர் ஆக செயலாற்றுகிறது.  ஆத்மாவையும் உயிரையும் சமநிலையில்  நிறுத்துவது இதன் வேலை.

உயிரை மனமும்,  மனதை ஆத்மாவும் கட்டுப்படுத்துகின்றன.

 மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது தான்.   ஆனாலும் அது சிந்திக்கும் தன்மையது.  மனம் ஆத்மாவுக்கு கட்டுப்பட்டு நடந்து உயிரை வழிநடத்தினால்  உடலும் ஆத்மாவும் வலுப்பெறுகின்றன.   உயிர் மனதின் வழி காட்டுதலில் இயங்க வேண்டும்.      உயிர் மனதின் கட்டுப்பாட்டை  மீறி (தன் கடமையை மறந்து) தன்னிச்சையாக செயல்படும்பொழுது உடலும் ஆத்மாவும் வலுவிழக்கின்றன.    இந்நிலையில் மனம் உயிரின் கட்டுக்குள் வந்து விடுகிறது

இது தான் ஆத்மா, மனம் , உயிர் செயல்பாட்டு தத்துவம்.

உயிர் உடல் சம்பந்தப்பட்டது.    புத்தியின்   உதவியுடன் உயிர்  உடலை ஆள்கிறது.  மூளையின் இயக்க சக்தி தான் புத்தி.   புத்தியின் உதவியுடன் உயிர் மூளையின் வாயிலாக உடலை இயக்குகிறது.

உடலின் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிக்கிறது.  மகிழ்கிறது அல்லது கஷ்டப்படுகிறது.  உயிரும் கட்டுக்குள் மனம் வரும்பொழுது உயிர் மனதை ஆட்டுவிக்கிறது    அதனை  தனக்கு சாதகமாக சிந்திக்கவும் திட்டமிடவும் தூண்டுகிறது

உயிர் உடலின் சுகத்துக்கு ஆசைப்படுகிறது.     உயிருக்குத்தான் ஆசை ஏற்படும்.   காரணம் அது ஆத்மா சம்பந்தப்பட்டது அல்ல.  உயிர்  உடல் சம்பந்தப்பட்டது.  மூளை, உடல் இவை இரண்டின் ஒருங்கிணைந்த இயக்கம் தான் உயிர்மை.      இந்த ஒருங்கிணைப்பு திறன் அல்லது சக்தி தான் உயிர்.  அதனை உருவாக்கியது ஆத்மா.      உடலை பாதுகாத்து ஆத்மாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான  இயக்கங்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் அது.   அது மனதின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டது. 

மனம் என்பது உடலின் உபரி தளத்தில் எண்ணங்களாக நிலை பெறுகிறது.

மனம் உயிருக்கு  கொடுக்கும் கட்டளைகளை  உயிர்   புத்தி மூலமாக  மூளை யைக்கொண்டு இயக்கி நிறைவேற்றுகிறது.  புத்தி என்பது மனதின் உதவியாளர்.    புத்தி என்பது மூளையில் அமைகிறது. 

உயிர் உடல் சுகங்களை அனுபவிக்கிறது.    அது மனதிலும் பிரதிபலிக்கிறது.  தொடர்ச்சியாக  உயிர் சுகங்களை அமிதமாக அனுபவிக்கிற பொழுது அது ஒரு விதமான போதைக்கு ஆட் படுகிறது.   போதை மூளையை தாக்குகிறது.  போதை மயக்கத்தில் மூளை திரும்ப திரும்ப சுகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டு உயிரை மகிழ்விக்கிறது.    மகிழ்ச்சியில் திளைக்கும் உயிர்  மனதின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை அறியாமல் விலகி விடுகிறது. அது ஆசைக்கு அடிமைப்படுகிறது.  இதன் தாக்கம் மனதில் பிரதிபலிக்கிறது.   

உயிரும் மூளையும் தன்னிச்சையாக செயல்படும் நிலையை  அடைந்தவர்கள் தம் நடவடிக்கைகளை  நியாயப்படுத்து வதற்காக கடவுளையும்,  தர்மங்களையும் தவறாக வியாக்யானிக்கிறார்கள்.   சுயநலத்துக்காக ஒவ்வொன்றையும் திரித்து கூறி திரிபே நேர் என்று எல்லோரும் நம்பும் நிலையை உருவாக்கி விடுகிறார்கள்.  மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு தாம் அடிமைப்படுவது மட்டுமின்றி சாமர்த்தியமான பேச்சினால் பிறரையும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்துகிறார்கள்.   சிந்தனை சக்தியும் உணர்வுகளும் அற்றுப்போய் விடுகின்றன.   யார் தங்களை நியாயப்படுத்தி சொல்கிறார்களோ அவர்களை, எந்த சிந்தனையும் இல்லாமல்  கூட்டம் கூட்டமாக பின்பற்றும் நிலை உருவாகிறது.     மனதில் இருக்கும் அடிப்படை மூல்யங்களுக்கு உயிரையும் புத்தியையும் எட்டமுடியாத நிலை உண்டாகிறது.   அதனால் தான் சிந்திக்கும் திறன் அற்றுப்போகிறது.    சுகத்தை அனுபவிக்க பணம் தேவை.   அதனை எவ்விதத்திலாவது தேடுவது  என்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக மாறிவிடுகிறது.

இந்த வேளைகளில் ஆத்மா விற்கும்  உயிருக்கும் இடையிலான மனதின்  தொடர்பு அற்று போகிறது. மனதின் இயக்கம் வழி மாறி விடுகிறது ; இயல்பிற்கு மாறுபட்டு  இயங்குகிறது  ஆத்மாவின் தொடர்பில் இருந்து தான் விடுபட்டு இயங்குவதை உணர்கிறது. அதனால் அது சோர்வடைகிறது..    .  இதனால் மனதில் ஏற்படும் பதற்றமே மனதின் இறுக்கமாக மாறி விடும்.  மனதின் இறுக்கம்  தொடரும் பொழுது அது ஒருவிதமான விறைப்புத் தன்மையை அடைகிறது .   இதனால்  மனது மந்தமடைகிறது.  அதன் இயக்கத்தில் சோர்வு ஏற்பட்டு   மனதால்  ஆத்மாவிற்கு அனுசரணையாக இயங்க முடிவதில்லை.    நாளடைவில் மனத்தால் ஆத்மாவின் அறிவுறுத் தல்களை உயிருக்கு முறையாக ஒழுங்கான முறையில் எடுத்து செல்லமுடிவதில்லை.  அதனால் ஆத்மாவிற்கும்  உயிருக்கும் உள்ள தொடர்பு குறைந்து புத்தி தன்னிச்சையாக செயல்படும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது.      அது உயிரையும் அதன் மூலம் உடலையும் சுயமாக இயக்குகிறது.

இந்த இடத்தில ஸ்ரீமத் பாகவதத்தில்  இருந்து கலி காலத்தின் நிலை பற்றிய சில குறிப்பிட்ட சுலோகங்களின் சில பாகங்களை  மேற்கோள் காட்டுவது உசிதமாக இருக்கும்.    அவையாவன:   

புற அடையாளங்களால் அதாவது உடலில் அணியும் (மத) சின்னங்களால்  மட்டுமே  ஒருவன்  ஆன்மீக வாதியாக கருதப் படுவான்.   சாமர்த்தியமான  வார்த்தைகளால்  கவர்ச்சிகரமாக பேசுபவனே அறிஞனாக  கருதப்படுவான்    ஸ்ரீமத் பாகவதம் 12.2.4

போலித்தனமே நல்லொழுக்கமாக கருதப்படும் -  ஸ்ரீமத் பாகவதம் 12.2.5

மதத்தைப்பற்றி தெரியாதவர்கள் அதன் அமைப்பு மையங்களில் தலைமை இடங்களில் அமர்வார்கள்;    மத தத்துவங்களை போதிப்பதாக நடிப்பார்கள் - ஸ்ரீமத் பாகவதம் 12.3.38

அர்ச்சகர்கள், அறிஞர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வித விதமான உணவுப்பழக்கங்களுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமைப்படுவார்கள்  -  ஸ்ரீமத் பாகவதம் 12.3.32

பணம், சொத்து சம்பாத்தியம் நற்பிறவியின் அடையாளமாக கருதப்படும்.  ஸ்ரீமத் பாகவதம் 12.2.2

வஞ்சகமும், ஏமாற்றுதலுமே வணிகத்தின் அடிப்படையாக கொள்ளப்படும்  ஸ்ரீமத் பாகவதம் 12.2.3

இது தான் இன்றைய காலகட்டத்தின் நிலை:

 அதாவது உடலுக்கு இன்பத்தை தரும் வசதிகள்  இன்பங்களில் திளைக்க முற்படுதலும், அதற்கு தேவை பணம் என்பதால் அதனை தேட வேண்டும் என்ற குறிக்கோளும் முன்னிட்டு நிற்கிற காலம் இது. அதாவது பலவிதமான ஆசைகள் முன்னிற்கிற காலம்.  மிதமாக பணத்தை தேடுவதற்காக எந்த தீங்கையும் செய்வதற்கு அஞ்சாமல் வேறு யாரைப்பற்றியும் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லோரும் வாழத்துணிகின்ற காலம்  இது. அதனால் நம் மனமானது. ஆத்மாவின் தொடர்பை மீறி நடக்கிற காலம்.  
 ஆன்மீக சிந்தனைகளும் கோட்பாடுகளும்  சுயநலத்துடன் திரித்து விளக்கப்படுகின்றன.     கடவுளையே  தவறாக சித்திகரிக்கப்படும் ஒரு கால கட்டம் இது/

இதுவே யோகத்திற்கு மாறான நிலை.

புத்திக்கு கட்டுப்பட்டு இயங்குகிற  உடல் சுகத்தை மட்டுமே நாடுகிறது.

அழிவற்ற ஆத்மாவின்  வளர்ச்சிக்கு   அது உயர்ந்த  நிலையை அடைவதற்கு,  உடல்  அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.      உடலுடன் அழியும் புத்திக்கு உடல் சுகம் மட்டும்தான் லட்சியம் .       அது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை.  அதனால் உடல் அமித சுக போகங்களால் மனதின் கட்டுப் பாட்டை இழந்து நோய்வாய்ப் படுகிறது.  இந்நிலை தொடர்ந்தால்   நாளடைவில் ஆத்மாவின் குறிக்கோள்  நிறைவு பெற   இயலாத நிலையில்  உடல் மரணமடைய நேர்கிறது. 

மனதின் வலுவான இயக்கத்திற்கு வலுவான உடல் தேவை.   ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே மனத்தால் சுயமாக ஆத்மாவிற்கு கட்டுப்பட்டு இயங்கி உயிரை கட்டுக்குள் நிறுத்த முடியும்.

மனக்கட்டுப்பாட்டில் உயிர் இருந்தால் மட்டுமே ஆத்மா வலுப்படும்;   அதன் சக்தி வளர்ச்சி பெரும்.

ஆத்மாவின் வளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியமும் கட்டுப்பாடும் மிக மிக முக்கியம்.

ஆத்மாவின் வளர்ச்சியின் நோக்கம் சமாதி அதாவது முக்தி அல்லது யோகம் அடைவது.     இங்கு யோகம் என்பது ஆத்மா இயற்கையுடன் இணைவது.    இதுவே முக்தி.      இதுவே யோகம்.

இந்த நிலையை அடைவதற்கு வழி காட்டியாக அமைவதே அஷ்டாங்க யோகம்.     இதைப்பற்றி ஒரு தனி இடுகையாக விளக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதனை படிக்கவும்.


1 கருத்து:

  1. அய்யா, இன்றுதான் உங்கள் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயம நியமங்களை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது அருமை.

    இந்த பதிவு சம்பந்த பட்ட ஒரு கேள்வி.

    ஆத்மா உடலுக்கு உள்ளே உள்ளதா அல்லது வெளியே உள்ளதா?

    பதிலளிநீக்கு