ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள். இந்த காலத்துக்கு ஒத்து வருமா? ஓர் விளக்கம்




அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்

வீடு பெறுதல், மோக்ஷம் அல்லது சமாதி  நிலையை அடையும் வழியான அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்  இங்கு விளக்கப்படுகின்றன .     ஆன்மா, மனம், உயிர்,  புத்தி,  சமாதிநிலை - ஓர் விளக்கம் என்னும் இடுகையின் தொடர்ச்சியாக இதனை படிக்கவேண்டும்.  அதனை படிக்காதவர்கள் முதலில் அதனை படித்து அறிந்தபின்னர் இந்த தொடரைப் படிக்கவும்.

யமம்,  நியமம் ஆகியவை  அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு  அடிப்படை நிலைகள்.          முறையே சமூகத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்,  என்பதையும் நம்மில் எதையெல்லாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும்  குறிக்கின்றன.

இவை மனம் புத்தி ஆகிய  இரண்டையும்  கட்டிப்போடுவதற்கான வழிகள்.

யமம்:  சமூகத்தில் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள். இதன் உட் பிரிவுகள் ஐந்து :       அவையாவன:

1.அஹிம்சை :  சக உயிர்களை துன்புறுத்தாமை;  வன்முறையைத்  தவிர்த்தல்.
2.சத்தியம்:  உண்மையாக நடந்து, உண்மையையே பேசி, நம்பகத்தன்மை       யுடன் வாழ்தல், போலித்தனத்தை தவிர்த்தல்.   உண்மை பேசுவதால் இடையூறு ஏற்படும்    சந்தர்ப்பங்களில் உண்மையை தவிர்ப்பதும் இதில் அடங்கும்.
3. அஸ்தேயம்:  பிறர் உடைமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ          திருடாதிருத்தல்; பிறருடைய  இயலாமையையும்  அறியாமையையும் சுயநலத்துக்காகவும் பொருள் சேர்க்கவும் பயன்படுத்தாமல் இருத்தல், அதாவது களவு தவிர்த்தல்.
4. பிரம்மச்சரியம் : பிரம்மத்தின் அம்சமாகிய உடலை முறையாக தினமும்     உடலொழுக்கத்துடன் பேணி பாதுகாத்தல்:  கட்டுப்பாடான உணவுப் பழக்கவழக்கங்கள், மிதமான  உடற்பயிற்சி மற்றும் மிதமான உடலுறவு ஈடுபாடு பழக்கங்கள்.
5. சுயநலம் இன்மை :  நான் என்னுடையது என்ற உணர்வுகளில் இருந்து             விடுபடுதல்.   பொறாமை,. பேராசை முதலானவைகளைத் தவிர்த்தல்.பிறர் உரிமைகளையும் அவர்கள் சுதந்திரத்தையும் மதித்து நடத்தல் 

நியமம்:   அனுசரிக்க வேண்டிய சுய ஒழுக்கங்கள்.     இதன்  உட் பிரிவுகள்
ஐந்து :       அவையாவன:

1. சௌச்சம் :  உடல் சுத்தம் அல்லது தூய்மை 
2. சந்தோசம்:     மன நிறைவு, எதிலும் திருப்தி அடைதல், மகிழ்ச்சி                              அடைதல்.
3. தபஸ் :   மன உறுதி , வைராக்கியம் இவற்றுடன் தெளிவான  குழப்பமற்ற            மனநிலையுடன் சஞ்சலமின்றி தெளிவுடன் இருப்பது . 
4. ஸ்வாத்யாயம் :   கல்வி கேள்விகள் வழியாக விசாலமான அறிவை வளர்த்துக்கொள்ளுதல் .  உணர்வுகள்  மூலம் ஏற்படும்  சுய விழிப்புணர்வு            அடைதல் 
5. ஈஸ்வர பிரநிதானம்:  எல்லையற்ற  எங்கும் நிறைந்த இறைவனை                      உணர்வுபூர்வமாக பரந்து  விரிந்த தெளிவுடன்   அறிதல்  

இவற்றை நாம் நம்மில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது நிலை ஆசனங்கள் .  அதாவது உடலை கட்டுப்படுத்தி ஆரோக்கியததுடன் அமரும்   முறைகள்.    இவையே இன்று யோக (த்திற்கு  வழி கோலும்) ஆசனங்கள் என்று அறியப்படுகின்றன.     

இறுதி யோகமான சமாதி நிலையை  அடைவதற்கு முன்னோடியாக அமைபவை தான் அடுத்ததாக வரும்  நான்கு நிலைகள். அவற்றை  கடைபிடிக்க    எவ்விதமான மன, உடல் அழுத்தமின்றி  அசையாவண்ணம் தளர்த்திய நிலையில் , இலகுவாக  அமர்வது  அவசியமாகிறது.      இதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஆசன  அல்லது அமரும்   நிலைகளே இவைகள்.    உடற் பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை கட்டுக்குள் நிறுத்தி எய்தும் நிலை தான் இலகுநிலை அமர்தல் (யோக ஆசனம் -ஒருங்கிணைந்த நிலை )

நான்காவது   பிராணாயாமம்     அதாவது  பிராண அயமம் என்னும் மூச்சுக்கட்டுப்பாடு.  தொடர்ச்சியான கட்டுக்கோப்பான சீரான முறையில்  
செய்யும் மூச்சு  பயிற்சி.  மூச்சை உள்ளிழுத்தல், வெளியேற்றுதல் ஆகியவற்றை இயல்பான கட்டுக்குள் கொண்டு வந்து சீரமைப்பது.    ஒரு நிமிடத்தில்  நாம் விடும் மூச்சு (ஒரு உள்ளிழுப்பும்  ஒரு வெளியேற்றமும்) சாதாரணமாக அறுபது முதல் எழுபது வரையில் இருக்கும்.   இந்த எண்ணிக்கை குறைந்து வரும்தோறும் ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஆயுள் அதிகரிக்கும் மனம் நிதானம் மற்றும் தெளிவு அடையும்.   இது   உயிரையும்  புத்தியையும் ஒருங்கிணைத்து  மனதினை  முழுக்கட்டுப்பாட்டில் நிறுத்தி மனதை வலுப்படுத்தும்.

ஐந்தாவது தன்மை பிரத்தியாகாரம்.    இது தியானத்திற்கு  அடிப்படை யான  ஐம்புலன்களை ஆளும் தன்மையை வளர்க்கும். அதாவது  பிராணாயாமம் தொடர்ந்து செய்வதன்மூலம் மனம் வலுப்பெறும்.  மனதின் கட்டுக்குள் உயிர் வரும். உயிரின் கட்டுக்குள் புத்தி வரும்.    ஆக மனதின் கட்டுப்பாட்டுக்குள்  அடங்கும் புத்தியினால் ஐம்புலன்கள் கட்டுப்படும்.   இது புத்தியை  மனதின் கட்டுக்கோப்பில் இருந்து விடுபடாமல், ஆசைக்கு அடிமைப்படாமல்   விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது.    புலன்களை அடக்கி உணர்வுகளை உடலுக்குள் மட்டுமே நிலைநிறுத்துவது.     உணர்வுகளை உடலுக்குள் தொடர்ந்து நிறுத்துவது பிரத்தியாகாரம். கடவுள் என்ற நிலையை ஏற்படுத்தும்   உன்னுள்ளே கடந்து செல். அங்கு நிலை கொள். கடவுள்.

ஆறாவது தாரணை.   அதாவது   அசையாத அலைபாயாத உறுதியான தன்மையுடன் பிரத்தியாகாரம் தொடரும்பொழுது உணர்வுகள் தொடர்ந்து உடலுக்குள் வலம் வரும்.  உணர்வுகளை  ஒருநிலைப்படுத்தி தொடர்ந்து உடலுக்குள் அசைவின்றி உறுதியுடன்  நிறுத்துவது தாரணை. .   இதனால் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து விடுபட்டு மனதில் நிலைபெறும்.    கடவுள்  என்று உண்மையில் நாம் எதனை கருதுகிறோமோ அதனை உணர வைக்கும்.  இது அடுத்த ஏழாவது நிலையில் கொண்டு சேர்க்கும் 

ஐந்தாவதும் ஆறாவதுமான நிலைகளின் ஒருங்கிணைவே  ஏழாவது நிலையான  தியானம்.    அதாவது புலன்களை கட்டுப்படுத்தி உணர்வுகளை உடலில் தொடர்ந்து உறுதியாக நிறுத்தும் பயிற்சி.   தவம் எனப்படுவதும் இதுவே .   உடலுடன் ஒருநிலைப்பட்ட மனதை விழிப்புணர்வில் தொடர்ந்து நிறுத்துவது.  மனதை கடவுளில் தொடர்ந்து நிறுத்துவது .   இது தொடரும்பொழுது உயிர் மனதுக்குள்ளும்,   தொடர்ந்து மனம் ஆத்மாவுக்குள்ளும் லயித்து நிற்கும்.  மனம் ஆத்மாவில் லயித்த நிலையில்  ஆத்மாவின் தூய்மை எனும் நேர்மறை சக்தி வலுவடையும் .  இந்நிலை தொடர்ந்து இறுதியில்  ஆத்மா பரமாத்மாவுக்குள் லயிக்கிறது.    ஆத்மாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் மனம் உடல் எல்லாம் ஒடுங்கி விடும் நிலை .  இதுதான்  எட்டாவது சமாதி நிலை;  ஆத்மாவின் இறுதி நிலை.  பரமாத்மாவுடன் இணைந்த  ஆத்மாவின் இறுதி நிலை.  பரமாத்மாவில் லயித்த  நிலை.

முதல் நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையையும் முறையாக சிலகாலம் தொடர்ந்து கடைபிடித்தால் அடுத்த நிலை எளிதாக வழங்கும்.   ஓவ்வொரு நிலையம் தொடர்ந்து நம்மை வந்தடையும்.   இறுதி யோக நிலையை அடைய வழி கோலும்

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி அனுசரித்து வந்தாலே போதுமானது. மரணத்தில் முக்தி அடைய இயலா  விடினும் ஆத்மா மேலும் தூய்மை பெற்று உடலிலிருந்து வெளியேறும்போது உயர்ந்த நிலையில்  வெளியேறும்.   இதன் தொடர்ச்சி அடுத்து வரும்  ஜென்மங்களிலும்  தொடரும்.  உயர்நிலை எய்தி முக்தி  சாத்தியமாகும் வாய்ப்பும் வரும் ஜென்மங்களில் பெறலாம். 

இந்நிலை எய்த அடிப்படையான யமம் , நியமம்  ஆகியவைகளை அனுசரிக்கவேண்டியது மிக முக்கியம்.

இன்றைய கால கட்டத்தில் பரவலாக பேசப்படும்  மற்றும் பயிற்றுவிக்கப்படும் தியானம் அல்லது meditation அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிடும் தியானத்திலிருந்து வேறுபட்டது.     கற்போரும், கற்பிப்போரும் இங்கு யமம் நியமங்களை  பொருட்படுத்துவதில்லை.   இது ஆசனம் மற்றும் பிராணாயாம முறைகளை கற்பதன் மூலம் மனதை அமைதி படுத்தி தெளிந்த நிலையில் நிறுத்துவதற்காக மட்டுமே.  இது புத்திக்கு சக்தி பகரும்.   புத்தி தெளிவடையும். பலன்கள் உயிர் உடல் அளவிலேயே அமையும் ஆனால் மனதையும்  ஆத்மாவையும் ஒண்றிணைக்காது.    பலன்கள் உயிர் உடல் அளவிலேயே அமையும்.
மனம் உயிர் அல்லது புத்தியின் கட்டுக்குள் அடங்கி விடும்.   இப்படிப்பட்ட பயிற்சி யினால் பலனே இல்லை என்று சொல்ல இயலாது.  பலன் பொருளாதார வளர்ச்சிக்கான முறையில் மனதை நல்லதோ கெட்டதோ எந்த வழியிலேனும் செலுத்த முயல்வதில்லை வெற்றி அளிக்கும். அதற்கான மனத்தெளிவை நல்கும்.  மனதை ஆன்மாவிடம் எடுத்து செல்லாது.

யமம், நியமம் ஆகிய இரண்டையும் அனுசரிக்காமல் செய்யக்கூடிய யோகப்பயிற்சிகள் மனதையும் உயிரையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் என்பது உண்மை.    ஆனால்  யமம் என்னும் சமூக ஒழுக்கங்களை கடைபிடிக்காத மனம் இவ்விதம் வலுப்பெறுவதால்,  சமூகத்தில் யமத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகளை வெற்றிகரமாக தன்னலத்திற்காக செய்யும் தன்மை ஏற்படும்.   நியமங்களை கடைபிடிக்காததால் இறைவனை உணரும் தன்மை இராது.  அப்படியே இருப்பதாக இருந்தாலும் அது தவறான இறை உணர்வாகவே இருக்கும்.    இறை உணர்வுடன் தவறுகளைத் தவிர்க்கும் பயிற்சி இல்லாததால் எதையும் எவரையும் சட்டை செய்யாமல் எந்த தவறையும் துணிந்து தன்னிச்சையாக செய்யும் நிலை ஏற்படும்.   தவறான வழிகளை எதோ ஒரு காரணத்தைக் காட்டி நியாயப்படுத்தி அதனால் தனம் சேர்க்கும் தன்மை வளரும்.   பொருள் சேர்க்கைக்கு உதவும்.

இன்றைய காலகட்டத்தில் கஷ்டம் வரும்வரை எவரும் தியானதை பற்றி சிந்திப்பதில்லை.  வருமானம் தேவையான(?) அளவுக்கு இல்லை என்னும்போது தான் கஷ்டம் உணரப்படுகிறது.   தேவையான அல்லது அதிகமான தனம் இருக்கும் வரையில் கஷ்டத்தை யாரும் பொருட் படுத்துவதில்லை.   பண  தட்டுப்பாடு ஏற்படும் போது  கஷ்டத்தை உணரவோ சிந்திக்கவோ செய்கிறோம்.  அப்போது மட்டுமே இறைவனை நினைப்பதும், தியானத்தை தேடிப்போவதும் இன்று  சகஜமாக  நடக்கிறது.    இதன் மூலம் நிலைமை சீராகி பணத்தட்டுப்பாடு நீங்கி செழிப்பு வரும்போது மீண்டும் பழைய  நிலைக்கு திரும்பி விடுகிறோம்.

இறைமையும், தியானமும் ஒரு இடைக்கால முகாம் ஆக மாறி விட்டது.

இவ்விதமான அடிப்படை அற்ற யோகப் பயிற்சியால் வீடு பெறுதல் என்னும் இறுதி யோக நிலையை எய்துவது என்பது இயலாத  ஒன்று.       அற வழியில் பொருள் தேடி அதனால் அடையும் இன்பத்தைஅனுபவித்து வீடு அடைய வேண்டும் என்பதே  தமிழ் மறைகள் வரிசைப்படுத்தும் அறம், பொருள், இன்பம், வீடு.         இதில் அறம் , பொருள், இன்பம் ஆகிய மூன்றும் யமம் நியமங்களில் அடங்கும்.  அடுத்த ஐந்து நிலைகள் வீடு என்பதனுள் அடங்கும்.

வீடு என்பது பாதுகாப்பான இடம்.   இவ்வுலகில் நாம் வாழும் வீடு உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தரும் இடம்.   மரணத்திற்குப்பின் வீடு என்பது ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் இடம்.

இறுதியாக ஒரு சந்தேகம்.    இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வருமா?

இந்த உலகத்தில் அனுபவிப்பதற்கு என்னவெல்லாம் வசதிகள், உணவுகள்,  ஆடம்பரங்கள்,  இன்பங்கள்  இருக்கிறன்றன.    பணமில்லாமல் இவற்றை எல்லாம் பெறவோ அனுபவிக்கவோ முடியுமா?   ஆசை இல்லாமல் இருந்தால் இவை  எல்லாம் சாத்தியமா?  அடுத்தவனைப்பற்றி கவலைப்பட்டால் நம் கதி என்ன ஆவது?    எது அற வழி?     அற வழியில் யாரையும் ஏமாற்றாமல் துன்புறுத்தாமல் தேவையான அளவுக்கு பொருள் சேர்க்க முடியுமா?   கண் முன் தெரியும் இன்பங்களை தவிர்த்து விட்டு, இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத  ஒரு வீடு பேற்றை அடைய நினைத்து ஏமாந்து போய்விட மாட்டோமா?   யமம் , நியமங்களை கடைப்பிடித்தால் தனம்  சேர்ப்பது எப்படி?  பிறர் மதிக்கத்தக்க நிலையில் நாம் வாழ வேண்டாமா?  பொருள் இல்லாதவர்களை யார் மதிக்கிறார்கள்?

பணம் இருந்தால் செய்யக்கூடிய எத்தனையோ பூஜைகள் இருக்கின்றன.  பக்தியுடன்  பூஜைகள் செய்தால் போதாதா?  அதனால் முக்தி கிடைத்து விடாதா?         எத்தனையோ கோவில்கள்,  தெய்வங்கள் இருக்கின்றன.      அங்கெல்லாம் சென்று தொழுதால் மட்டும் போதாதா?  எளிதில் எந்த சிரமமும் இன்றி முக்தி கிடைத்து விடாதா?    இந்த இடத்தில பிறந்தால் முக்தி, இந்த இடத்தில வாழ்ந்தால் முக்தி, இந்த இடத்தில கால் பட்டால் முக்தி என்று எவ்வளவோ இடங்களை  சுட்டிக்காட்டி கதா காலாட்சேபங்களும்  பிரச்சாரங்களும்  நடக்கின்றன.       இவ்வளவு வழிகளும் இருக்கின்றனவே !
பின் என்ன கவலை?     இந்த குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்தோ,  மிதித்தோ  முக்தி அடையலாமே !    இப்படி ஓர்  சிந்தனை.

யாருக்கு வேண்டும் இந்த முக்தி?     இந்த உலகத்தில் சந்தோசம் அனுபவித் தால் போதாதா?   இதைவிட வேறு என்ன வேண்டும்!  இப்படியும்  ஒரு எண்ணம்.

மரணத்திற்கு பின்னர் நடக்கப்போவதை யார் பார்த்தார்கள்!.   நம் முற்பிறவியைப்பற்றிய எதையம் நாம் இப்பிறவியில் உணரவில்லையே!    பின்னர் ஏன் அடுத்த பிறவியைப்பற்றிய சிந்தனை.     முற்பிறவியைப்பற்றி ஒன்றுமே அறியாத நிலையில்  அடுத்த பிறவியில் அனுபவிப்பதை உணரவா போகிறோம் ?     அதனால்  இந்த பிறவியில் சுகங்கள் அனுபவிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் ?    இப்படியும் ஓர் எண்ண ஓட்டம்.

இந்த கேள்விகளும், இவற்றிற்கான விடைகளும் முடிவுகளும் நம் சிந்தனைக்கு விடப்படுகின்றன.       சிந்திப்போமாக.      அவரவர் மனநிலைக்கேற்ப எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இந்த இடுகையின் நோக்கம் உண்மை நிலைய எடுத்துக்காட்டுவது என்பது மட்டுமே  சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும்  ஒரு வழிகாட்டியாக இதனை நினைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்.    ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் சிந்திக்கும் சுதந்திரத்தையும் அதன் மூலம் முடிவெடுக்கும் திறனையும் நாம் மதிக்கிறோம்.

 நன்றி.  வணக்கம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக