சனி, 13 அக்டோபர், 2018

Chanting and Spiritual uplift - Manthras மந்திர ஜபம் எப்படி பலன் தரும் - அதன்அடிப்படை என்ன?

மந்திர ஜபம் எப்படி பலன் தரும்- அதன் அடிப்படை என்ன?

ஒலி அல்லது ஓசை என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று என்பது சொல்லித்தெறியவேண்டியதில்லை..     ஆனால் ஒலி  என்றால் என்ன ?    இந்த  கேள்விக்கு எப்படி பதில் சொல்வது .   யோசித்துப் பாருங்கள்.  இதனை பார்க்க முடியாது.   கேட்க மட்டுமே முடியும் .இதற்காகவே நமக்கு இரண்டு காதுகள் அமையப்பெற்றிருக்கின்றன.  நமது கருத்து பரிமாற்றங்களுக்கு ஓசையின் வித்தியாசங்கள் அடிப்படையில் அமையும் பேச்சு தான் பயன்படுகிறது.

ஒரு பொருள் அதிரும்பொழுது அது  காற்றில் ஏற்படுத்துகிற அலைகள்  நமது காதுகளின் உள்ளே அமைந்துள்ள செவிப்பறையில் தட்டி அதிர்வை பகிர்கிறது.  அதை ஏற்று நம் செவிப்பறை அதிர்கிறது.   நரம்புகள் மூலமாக இந்த அதிர்வுகள் நம் மூளையை எட்டுகிறது.    அங்கே  ஒலி அடையாளம் காணப்படுகின்றது .  சப்தம் நம் மூளையில் ஒலிக்கிறது.     நன்றாக கவனிக்கவும் அதிர்வு முதலில் எங்கே உண்டானதோ அங்கே ஓசை ஒலிக்கவில்லை.     ஆனால் நம் மூளையில் தான் ஒலிக்கிறது.    இன்னும் தெளிவாகச் சொன்னால் நம்மை சுற்றி அமைந்திருக்கும் நம்முடைய சக்தி மண்டலம் முழுவதிலும்  ஒலிக்கிறது.     அதாவது நமது ஆத்மாவில் ஒலிக்கின்றது என்று சொல்வதே சரியாக இருக்கும். 

முதலில் அதிர்வு உண்டான இடத்தில் அல்லது புள்ளியில் எந்தவிதமான ஓசையும்   உண்டாகவில்லை  என்பது  தான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று.

அதாவது நாம் கேட்கும் ஒவ்வொரு ஒலி யும் நமது சக்தி மண்டலத்தில் மட்டுமே ஒலிக்கின்றது;   சலனத்தை உண்டாக்குகிறது.    இந்த சலனம் நம் உடல் முழுவதிலும் உணரப்பட்டு அதன் பாதிப்பு நமது மனதில் ஏற்படுகிறது.  வெவ்வேறான ஓசைகள் அல்லது சப்தங்கள் நம் மனதில் வெவ்வேறான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.    இது முதன் முதலில் நமது சக்தி மண்டலத்திலேயே ஏற்படுகிறது.   அதன் விளைவுகளை அதன் பின்னரே நாம் அனுபவிக்கிறோம்.

நம்  சக்தி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

இந்த அடிப்படையில் தான் மந்திர ஜபம் பயன் தருகிறது.

அதிர்வுகள் ஓசைக்கு காரணமாகின்றன.   ஓசையில் அடிப்படையானது ஓங்காரம்.   வாயு, நெருப்பு,  நீர் ஆகிய மூன்று பூதங்களும் அசையும் தன்மையன.    காற்று வீசும்பொழுது ஓம் என்னும் ஓங்காரம் உண்டாகிறது.   நெருப்பு ஓங்கும்பொழுதும் அதே  ஓம் என்னும் ஓங்காரம் ஒலிக்கிறது.   கடல் நீர் ஆர்ப்பாரிக்கும்பொழுது அதே ஓங்காரம் கேட்கிறது .   ஆகவே ஓங்காரம் என்பது இயற்கையின் ஓசை.   பிரபஞ்சம் எங்கும் எப்பொழுதும் நிறைந்து ஒலிக்கும் ஓசை. 

நம் சக்தி மண்டலத்தில் ஓங்காரத்தை நிலையாக ஒலிக்கச் செய்தால் அது இயற்கையுடன்  இணையும். அது ஓங்காரத்தால் நிறையும்பொழுது  முக்தி அல்லது பிறவி எடுப்பதிலிருந்து விமோசனம் கிடைக்கிறது.    இயற்கையின் ஓசை முழுவதுமாக  நம் சக்தி மண்டலத்தில் நிறையும்பொழுது நாம் முழுவதுமாக நிரந்தரமாக இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.    இதுவே முக்தி அல்லது மோக்ஷம் .  இதுவே சொர்க்கம்   சொர்க்கம் என்பது வடமொழிச்சொல்.   அதாவது ஸ்வ வர்க்கம் சொர்க்கம் ஆனது.    நாம் எந்த வர்க்கத்திலிருந்து வந்தோமோ அது தான் ஸ்வ வர்க்கம்.

மந்திரம் பழகிய பிறகு,  வெகு இயல்பாக நாம் உச்சரிக்கும் பொழுது உண்டாகிற ரிதம் அல்லது சுருதி நம் சக்தி மண்டலத்தில் ஓங்கார அலைகளை ஏற்படுத்துகிறது. சக்தி மண்டலத்தில் ஓங்காரம் நிலைபெறும்பொழுது அதன் அதிர்வுகள் அல்லது படபடப்பு குறைகிறது.   இது மனதில் நிதானம் ஏற்படக்காரணமாக அமைகிறது.  தியான நிலைக்கு இது தான் அடிப்படை.

மனது நிதானத்திற்கு வரும்பொழுது நம் மனது நமக்குள் நிறுத்தப்படுகிறது .  நமது சுவாசம் ஒழுங்கு படுத்தப்படுகிறது.    சுவாசம் ஒழுங்காக நடை பெறும்பொழுது அசுத்தக்காற்று முழுவதுமாக நுரையீரலிலிருந்து வெளியேறி தேவையான அளவுக்கு பிராண வாயு அங்கு பிரவேசிக்கிறது.   இரத்தம்  சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டு உடல் முழுவதும் சீரான முறையில் ஓடுகிறது.  இவ்விதம் நமது ஆரோக்கியம் சீர் செய்யப்படுகிறது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்பொழுது நம் சக்தி மண்டலம் நேர் நிலையில் அமைகிறது.    இல்லாதபோது சிதறுபடுகிறது .   உடல் அசுத்தம்  சக்தி மண்டலத்தையும் அசுத்தப்படுத்துகிறது.

நாம் ஒரு ஒலியை உண்டாக்குகிறபொழுது மூச்சை வெளியே விடுகிறோம் .
அடுத்த ஒசையை  நாம் ஒலிப்பதற்குள் நாம் அறியாமலேயே காற்றை உள்ளே இழுத்துக்கொள்கிறோம்     அடுத்த உச்சரிப்பின்போது மீண்டும் காற்று வெளியேறுகிறது.   ஒரே சொல், ஓசை அல்லது மந்திரத்தை திரும்பத்திரும்ப சொல்லும்பொழுது மூச்சு ஒரே சீராக நடைபெறுகிறது . சரியாக சொன்னால் ஒரு பிராணாயாமம் பயிற்சி நடக்கிறது.

இதன் காரணமாகவே நம் சக்தி மண்டலம் சீராகிறது.   தொடர்ந்து  ஜபம் அல்லது உச்சாடனம்  அல்லது அதே ஓசையை மீண்டும் மீண்டும் சிறிது  நேரத்திற்கு  எழுப்புகிற பொழுது  உச்சாடனம் நிறுத்திய பிறகும் தொடர்ந்து  சக்தி மண்டலம் சீரான நிலையில் குறிப்பிட்ட நேரம் வரையில்  நிலைகொள்கிறது.

இது காலை நேரங்களில் தொடர்ந்து  பழகி வரும்பொழுது நமது அன்றாட வேலைகளில் கவனம் சிதறாமல் ஈடுபடவும் நிதானமாக எதையும் பதட்டப்படாமல் எதிர்கொள்ளவும் தீர்மானங்கள் எடுக்கவும் உதவியாக இருக்கும்.         

நன்றி.     வணக்கம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக